_________________________________________________________
முகப்பு || கட்டுரைகள் || கவிதைகள் || பலஸ்தீன் || ஈராக் || ஈரான்
ஆப்கான் || பாகிஸ்தான் || இந்தியா || ஏனையவை
_________________________________________________________
Loading...

 

ஃபிரான்ஸிலுள்ள ஷெய்க் யாஸீன் அமைப்பின் எதிர்ப்புப் பேரணி

 

பரிஸ் – கடந்த ஞாயிற்றுக்கிழமை (03.01.2010) ஃபிரான்ஸில் உள்ள ஷெய்க் யாஸீன் அமைப்பினர் காஸாவின் எல்லையில் மாபெரும் சுவரொன்றை நிர்மாணித்துவரும் எகிப்தின் இதயமற்ற போக்கைக் கண்டித்துத் தமது எதிர்ப்பைத் தெரிவிக்குமுகமாக பரிஸிலுள்ள எகிப்தியத் தூதுவராலயத்தின் முன் பேரணியொன்றை ஒழுங்குசெய்திருந்தது.  

 

ஃபிரான்ஸிலுள்ள மேற்படி அமைப்பு தமது அறிக்கையில், தமது பேரணி, காஸாவுக்கு ஆதரவான உலக ஒருங்கிணைப்புப் பேரணிக்குத் தடைவிதித்த எகிப்தின் கடும்போக்கினை எதிர்ப்பதையும் நோக்காகக் கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.

 

எகிப்தியத் தூதுவராலயத்தின் முன் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான அரபு மற்றும் வெளிநாட்டு சமாதான ஆர்வலர்கள், காஸா மீதான மனிதாபிமானமற்ற முற்றுகையை எதிர்க்கும் வகையிலமைந்த சுலோகங்களையும், காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பலஸ்தீனர்களின் புகைப்படங்களையும் தமது கரங்களில் ஏந்தியிருந்தனர்.

 

ஷெய்க் யாஸீன் அமைப்பின் தலைவர் அப்துல் ஹகீம் அல் ஸஃப்ரிவி காஸாவை முற்றுகையிலிருந்து விடுவிக்கக்கோரி ஒழுங்குசெய்யப்பட்டிருந்த பேரணியில் கலந்துகொண்டோர் மீது தாக்குதல் நடாத்திய எகிப்திய நிர்வாகத் தரப்பின் மனிதாபிமானமற்ற போக்கினை மிக வன்மையாகக் கண்டித்தார்.

காஸா எல்லையில் எகிப்தினால் நிர்மாணிக்கப்பட்டுவரும் பெருஞ்சுவர்

 

அவர் மேலும் குறிப்பிடுகையில், காஸாவை நோக்கிச் சென்றுள்ள வெளிநாட்டுச் செயற்பாட்டாளர்களைத் தடுத்து நிறுத்தாமல், அவர்கள் தமது பயணத்தைத் தொடர்வதற்குரிய சகல வசதிகளையும் செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டதோடு, மேற்படி உலக மனிதாபிமானச் செயற்பாட்டாளர்களின் பிரதான இலக்கு மனிதாபிமான உதவி வழங்குவதே. எனவே, அதனை எகிப்தின் தேசிய நலன்கள் என்ற அம்சத்தோடு குழப்பிக்கொள்ளத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

 

இதேவேளை, கடந்த ஞாயிறன்று ஜோர்தான் தலைநகர் அம்மானில் உள்ள எகிப்திய தூதுவராலயத்தின் முன்பு பல்வேறு ஜோர்தானிய அமைப்பினர் ஒன்றிணைந்து நடாத்த முற்பட்ட எதிர்ப்புப் பேரணியை, அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் தடுத்துநிறுத்தியுள்ளனர்.

 

அத்துடன், எகிப்திய அரசாங்கத்துக்குச் சார்பாக காஸா எல்லையில் அமைக்கப்படும் பெருஞ்சுவருக்கு ஆதரவாக ஃபத்வா வழங்கியுள்ள அல் அஸ்ஹர் இஸ்லாமிய ஆய்வு அமையத்தின் செயலை கெய்ரோவிலுள்ள முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு மிக வன்மையாகக் கண்டித்துள்ளது.

 

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உதயம்